[1] [vc_row][vc_column el_class=”ta-baloo-thambi2″][vc_column_text el_class=”ta-baloo-thambi2″]
- கலியுகத்தில் நாம ஸ்மரணையை விட சிறந்த சாதனை வேறு இல்லை. இதில் நமக்குப் பணச் செலவோ, சக்தி வீணாவதோ கிடையாது. இது நமது அச்சத்தையும் படபடப்பையும் நீக்கி ஊக்கம் தருகிறது. நம் மனம் என்பது எண்ணங்கள், ஆசைகள் ஆகியவற்றின் தொகுப்பு. அரிஷத்வர்க்கம் அதனால் அமைதியின்மை மனதில் உள்ளது. இறைவனின் திருநாமம் தொடர்ந்து மனதிலிருந்தால், இவற்றிலிருந்து விடுதலையும், அமைதியும் கிட்டும்.
- கீர்த்தனை என்பது அதன் இராக தாளத்தில் இல்லை. பாடலில் பொதிந்திருக்கும் பாவத்தையே பகவான் நோக்குகிறார். இராகம், தாளம் இவையெல்லாம் சிறப்பாக இருந்தும், பக்தி எனும் பாவம் இல்லை என்றால் அதை இறைவன் ஏற்பதில்லை.
- மனிதன் எப்பொழுதுமே மற்றவரின் குற்றங் குறைகளையே காணுகிறானே தவிர தன்னுடைய குறைகள் அவனுக்கு புலப்படுவதில்லை. தான் மிகவும் சரியானவன் என்றே அவன் கருதுகிறான்.
- கெட்டவர்களுக்கு உதவி செய்தால் கெடுதலே நேரும்.பாம்புக்கு பால் வார்த்தால் அந்த நல்ல பாலும் நஞ்சாகி விடலாம். ஆகவே பகுத்துப் பார்க்கத் தெரிய வேண்டும்.
- எந்த நாமத்தை நாம் சொல்லுகிறோம் என்பது முக்கியமில்லை. எவ்வளவு காலம் சரியாகவும், தொடர்ந்தும் சொல்லுகிறோம் என்பது தான் முக்கியம்.
- நமக்கும் இறைவனுக்கும் இடையே தடையாக இருப்பது, கர்ம பலன் மீது நாம் வைக்கும் பற்றுதான், பலன் மீது பற்று அற்று, இறைவனுக்காகக் கர்மத்தைச் செய்பவன் அனைத்திலும் வெற்றி காண்கிறான்.
- சுயநலமில்லாத ஒரு செயல், சுயநலத்துடன் ஆற்றும் செயலின் விளைவை விட இயல்பாகவே நன்றாக இருக்கும். கிருஷ்ணன் வடிவத்தை ஒரு சிற்பி செதுக்குவதாக வைத்துக் கொள்வோம். அந்த சிலை நல்ல பாவத்தோடு உயிரோட்டமுள்ள சிலையாக மிளிர்வது, சிற்பியின் பக்தியைப் பொறுத்ததாகும். பணத்துக்காக சிற்பி சிலை வடிக்கும்போது அதில் கலை, அழகு எதுவுமிருக்காது.
- கோபம், பொறுமையின்மை என்ற இரண்டும் எதனையும் சரியாகப் புரிதலுக்கு எதிரிகள்.
- தனிமனிதனின் புகழ்ச்சிக்கும், சக்திக்கும் ஓர் எல்லை உண்டு. தனிமனிதன் எல்லாக் காரியத்தையும் ஏற்று நடத்த முடியாது. ஒருவன் ஒரு காரியத்தை முடிக்க, பலரின் ஒத்துழைப்பு பெற வேண்டியிருக்கும். ஒருவன் தான் எல்லாவற்றையும் செய்ய வல்லவன் என்று தற்பெருமை கொண்டால், இறைவன் அதை ஒடுக்கி விடுவார்.
- கடவுள் தான் சத்யம் என்று நான் கருதினேன். ஆனால் இப்போது சத்யம் தான் கடவுள் என்று கருதுகிறேன் – மகாத்மா காந்தி.
- பிரார்த்தனை என்பது ஒழுங்கையும், அமைதியையும், அன்றாடம் நமக்குத் தரும் சாதனமாகும்.
- மதம் எனக்குச் சொல்லுவது என்னவென்றால், துன்பம் வருகிற போது, நாம் விரைந்து பிரார்த்திக்க வேண்டும். உடலுக்கு உணவு தேவை என்பது போல மனதிற்கு பிரார்த்தனை தேவை.
- திருப்தி என்பது விரும்பியதைப் பெறுவதில் இல்லை. அதற்காக எவ்வளவு முயற்சி செய்கிறோம் என்பதில் இருக்கிறது. முழு முயற்சியே முழு வெற்றி. பாபா சொல்லுகிறார்: “நண்பர்களும், பக்தர்களும் ஒன்றாகக் கூடி ஒரு சேவையில் இறங்கினாலும், குழுவாக ஒரு காரியத்தைச் செய்தாலும், அது நல்ல மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தரும்.” ஏழைகளுக்கு உணவு இடுவதற்காக, நாம் ஒன்றாகக் கூடி அவர்களுக்கு வழங்குகிறபோது, நாம் மகிழ்ச்சியையும் திருப்தியையும் அடைவதை உணரலாம்.
- இந்த பிரபஞ்சம் நமது மகிழ்ச்சிக்காக இருக்கிறது. இருப்பினும், ஆசைகளை, தேவைகளை அளவுடன் வைத்திருக்க வேண்டும். ஆசை என்பது ஒருவனது பலவீனம். மென்மேலும் அதிகரிக்கும் ஆசைகளே நம்மைப் பிச்சைக்காரர்களாக ஆக்குகின்றன. நாம் அரசனின் மக்கள்; பிச்சைக்காரர்கள் இல்லை. எவருக்கெல்லாம் உலகில் அதிகபட்ச ஆசைகள் இருக்கின்றனவோ, அவர்கள் தான் ஏழைகள் என்கிறார் பாபா. எவர் தர்ம நெறிப்படி வாழ்கிறார்களோ, அவர்களது அளவான விருப்பங்கள் நிச்சயமாக நிறைவேற்றப்படும்.
- மதம் மூலத்திற்கு (இறைவனை நோக்கி) மனிதனை இட்டுச் செல்லும் அகமுகப்பயணமாகும். ஒவ்வொரு மதத்திற்கும் தத்துவக் கோட்பாடு உண்டு. மதம் இதயத்துடன் சம்பந்தப்பட்டது. தத்துவக்கோட்பாடு அறிவுடன் சம்பந்தப்பட்டது. இரண்டும் ஒன்றையொன்று தழுவி இருக்கவேண்டும்.
- உன்னை ஒருவன் சபித்தால், நீ அவனிடம் நன்றி பாராட்டு. ஏனெனில் உன்னுள் சகிப்புத் தன்மை வளர அவன் காரணமாகிறான். வாழ்க்கையில் சகிப்புத்தன்மை இன்றியமையாததாகும். மகாத்மா காந்தி வாழ்வில் அஹிம்சையைக் கடைப்பிடித்து, சகிப்புத் தன்மையுடன் வாழ்ந்து காட்டினார்.
- அன்பில் மூன்று வகை உள்ளது. 1) தான் ஒன்றும் தராமல், எப்போதும் யாசித்துக் கொண்டிருப்பது. 2) அன்பிற்குப் பிரதிபலனாக எதையாவது எதிர்பார்ப்பது. 3) எதையும் எதிர்பார்க்காமல் அன்பு செலுத்துவது.
[/vc_column_text][/vc_column][/vc_row]