கதை : அன்பு தாகம்

ராஜுவும் ரோகணும் அவர்களது கடற்கரையோர வீட்டின் தாழ்வாரத்தில் விளையாடிக்கொண்டிருந்தனர். திடீரென்று ராஜு ஒரு சிறிய புறாவைப் பார்த்தான் அந்தப் புறா அவர்கள் வீட்டுப் பின் பக்கத்தில் உள்ள நீர் ஊற்றில் இருந்து நீர் அருந்திக் கொண்டிருந்தது. பாவம் அந்தப் பறவை நாவறண்டு இருந்தது ஆனால் இந்தக் குறும்புக்கார சகோதரர்களுக்கு அதன் மேல் இரக்கமே வரவில்லை. அதைத் தாகம் தணிக்க விடுவதற்குப் பதிலாக இருவரும் அதை விரட்டுவதற்காகப் பின் பக்கத்திற்கு ஓடினார்கள். இவர்கள் தடதடவென்று ஓடும் சத்தம் கேட்டு அந்தப் பறவை பயந்து பறந்து விட்டது. இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அவர்களுடைய பாட்டி மனவருத்தத்துடன் தலையசைத்தார். சிறுவர்கள் இருவரும் மதியம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலில் விளையாடினார்கள். பின்னர் இருவரும் தாகத்துடன் சென்று கதவருகில் நின்று கொண்டு அவசரமாக ஒரு கோப்பை தண்ணீர் கேட்டனர்.

ஆனால் பாட்டி அவர்களை உள்ளே அழைத்துச் செல்வதற்கு பதிலாக வீட்டின் பின்பக்கத்திற்கு அழைத்துச் சென்றார். “நாங்கள் மிகவும் களைப்பாக இருக்கிறோம் பாட்டி இதற்கு மேல் எங்களுக்கு விளையாட வேண்டாம்” என்று அழுதான் ரோகன். “ஆமாம் பாட்டி! எங்களுக்கு மிகவும் தாகமாக இருக்கிறது தயவுசெய்து தண்ணீர் கொடுங்கள்” என்று கெஞ்சினான் ராஜு. சரி ,நீங்கள் இன்று காலை அந்த குட்டிப் பறவைக்கு எப்படிக் கொடுமை செய்தீர்கள் என்று விளக்குங்கள் பார்க்கலாம். என்றாள் பாட்டி. அந்தச் சிறுவர்கள் அவர்கள் செய்த குறும்புத்தனத்தை நினைத்து சிரித்துக் கொண்டார்கள். பாட்டி மேலும் பேசுவதற்கு முன்னால் சிறுவர்கள் பதிலளிக்கத் தயாரானார்கள். “பாட்டி! அந்தப் பறவை நம் வீட்டு ஊற்றிலிருந்துத் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது. ஒருவர் மற்றொருவர் தட்டில் இருந்து எதையும் எடுக்க கூடாது என்று நீங்கள் எப்பொழுதும் கூறுவீர்களே?” என்று கூறினான் ராஜு.

“ஆமாம் பாட்டி! அவன் சொல்வதும் சரிதான் . நாங்கள் அந்தப் பறவையை விரட்டியதால்தானே நமக்குத் தண்ணீர் மிச்சமாகியது” என்றான் ரோகன். சிறுவர்களின் தவறான எண்ணமும் கர்வமும் பாட்டிக்குப் புரிந்தது .அவர்களுக்குக் கண்டிப்பாக ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று முடிவு எடுத்தார். அவர்களைப் பார்த்து ஒரு புன்முறுவலுடன், “நீங்கள் எவ்வளவு அழகாகத் தண்ணீரை சேமித்துள்ளீர்கள். நானே உங்களிடம் இருந்து கற்றுக் கொள்ளவேண்டும் போலிருக்கிறது. சரி நீங்கள் ஒரு வேலை செய்யுங்கள். இன்று இரவு உணவு வரை நீங்கள் தண்ணீரே அருந்தாதீர்கள். அப்படி இருந்தால் கண்டிப்பாக நிறைய தண்ணீர் மிச்சமாகும்? என்றார்.

உணவு வரை நீங்கள் தண்ணீரே அருந்தாதீர்கள். அப்படி இருந்தால் கண்டிப்பாக நிறைய தண்ணீர் மிச்சமாகும்? என்றார்.

பாட்டியின் இந்த நகைச்சுவை கலந்த மிரட்டலைக் கேட்ட சிறுவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருவருக்கும் பாட்டியின் பிடியிலிருந்துத் தப்பிக்க வழி தெரியவில்லை. இரண்டு மணி நேரம் கடந்தது. முடிவில் இருவரும் வறட்டு கர்வத்தை விட்டுப் பாட்டியிடம் சென்றனர். “பாட்டி நீங்கள் செய்வது சரியே இல்லை” என்றான் ரோகன். பாட்டி புன்முறுவலுடன், “ஏன் அப்படிச் சொல்லுகிறாய் குழந்தை?” என்று கேட்டார். “உங்களிடம் நிறைய தண்ணீர் இருந்தும் எங்களுக்கு கொடுக்க மறுக்கிறீர்களே” என்றான் ராஜு. “பாவம் அந்த புறாவுக்கும் நீங்கள் இதைத்தானே செய்தீர்கள்” என்று கேட்டார் பாட்டி.

இரு சிறுவர்களும் வெட்கத்தால் தலை குனிந்தனர். அந்தப் புறா தாகத்தால் எப்படி வாடி இருக்கும் என்று அவர்களுக்குப் புரிந்தது. இருவரும் ஒன்றாக இணைந்து, “எங்களை மன்னித்துவிடுங்கள் பாட்டி” என்று கூறினர். “உங்களுக்கு புத்தி வந்து இருக்கும்” என்று நம்புகிறேன் என்றார் பாட்டி. இரண்டு சிறுவர்களும் பலமாகத் தலையசைத்தனர். பாட்டி ஒரு வெற்றிப் புன்னகையோடு அவர்களுக்குத் தண்ணீர் கொடுத்தார்.

அன்று முதல் ராஜுவும் ரோகனும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இரக்கம் காட்டினர். இப்பொழுதெல்லாம் அவர்கள் ஒவ்வொரு கோடை காலத்திலும் அவர்கள் வீட்டுத் தாழ்வாரத்தில் ஒரு பெரிய கிண்ணத்தில் தண்ணீர் வைக்கின்றனர்.