கதை : திருடன் திருந்தினான்; குணவான் ஆனான்

ஒரு மஹான் ஒரு சிறிய கிராமத்துக்கு வந்தார். நிறைய பேர் அவரது தரிசனத்துக்குச் சென்றனர். சில தீய ஒழுக்கம் உள்ளவர்களும் உடன் சென்றனர். இவர்கள் அந்த மகாத்மாவிடமிருந்து உபதேசம் பெற விழைந்தனர். அதற்கு அந்த மஹாத்மா அவர்களுக்குக் கூறிய அறிவுரை என்னவென்றால் அவர்கள் திருட்டு, சூதாட்டம், பொய் பேசுதல் ஆகிய மூன்று குணங்களை விட்டு விட வேண்டும் என்பதாகும்.

இதற்கு அவர்கள் கூறியது, “மகாத்மாவே, நாங்கள் திருடுதலையும், சூதாடுதலையும் விட முடியாது. ஏனெனில் அவை எங்களது பிழைப்பாகும். இருப்பினும் நீங்கள் சொல்வதால், இனி பொய் சொல்வதை விட்டு விடுவோம் என்று உறுதி எடுத்துக் கொள்கிறோம்.” மகாத்மா கூறினார், “நல்லது. என் குழந்தைகளே! சந்தோஷம்! குறைந்தபட்சம், ஒரு கெட்ட குணத்தையாவது விட்டு விடுகிறீர்களே! கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்.”

அன்றைய தினம் இரவே, திருடர்களில் ஒருவன். ராஜாவின் அரண்மனையில் திருடத் துணிந்தான். அரண்மனையை அடைந்த போது அங்கு ஒருவன் உலவிக் கொண்டிருந்ததைக் கண்டான். அது வேறு யாரும் அல்ல. ராஜாவேதான். திருடனுக்கு அது ராஜா என்று தெரியாது. ராஜா தூக்கம் வராததால் மாடியில் உலவிக் கொண்டிருந்தார். அவர் திருடனைக் கேட்டார், “யார் நீ?”. திருடன் கூற முற்படும் போது, அவனுக்கு உண்மையே பேச வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டது நினைவுக்கு வந்தது. நான் ஒரு திருடன் என்றான். ராஜாவிற்கு இவ்வளவு நேர்மையான பதிலைக் கேட்டு அவனைப் பற்றி அறிய ஆர்வம் கொண்டான். மேற்கொண்டு விஷயம் கறக்க முயற்சித்தான். ராஜா கூறினான், “நானும் திருடன் தான். நான் உனக்கு திருட உதவி செய்கிறேன். வா என்னுடன்“. ராஜா அவனை உள்ளே அழைத்துச் சென்று இரும்புப் பெட்டியின் சாவிகளைக் கொடுத்து அவனுக்கு வேண்டியதை எடுத்துக் கொள்ள சொன்னார். பெட்டியை திறந்து பார்த்த திருடன், அனேக பொருட்களைக் கண்டான், மூன்று பெரிய வைரங்களையும் கண்டான். அவன் இரண்டு வைரங்களை மட்டும் எடுத்துக் கொண்டு மூன்றாவது வைரத்தை அங்கேயே வைத்து விட்டான். வெளியே வந்த திருடன் ராஜாவிடம் ஒரு வைரத்தை கொடுத்துவிட்டு, “மூன்று வைரங்களை சரிசமமாகவும் ஒழுங்காகவும் பங்குபோட முடியாது என்பதால் நான் இரண்டு வைரங்களை மட்டும்தான் எடுத்தேன். வேறு எதையும் எடுக்கவில்லை. எனவே இந்த ஒன்றை நீ எடுத்துக்கொள், ஒன்றை நான் வைத்துக்கொள்கிறேன்” என்று சொல்லிக்கொண்டே சாவிகளையும், வைரத்தையும் ராஜாவிடம் கொடுத்தான். ராஜா அவனது விலாசத்தை கேட்டான், இனிமேலும் வருங்காலத்து திருட்டுகளுக்கும் உதவுவதாகக் கூறினான். திருடன் விலாசத்தைக் கொடுத்து நன்றி கூறி விடை பெற்றான்.

மறு நாள் காலை ராஜா, திருட்டைப்பற்றி அறிவித்து, சரியான புலன் விசாரனை செய்து அறிக்கை கொடுக்கும்படி முதன்மந்திரிக்கு உத்தரவிட்டார். மந்திரி இரும்புப்பெட்டியைத் திறந்து பார்த்தபோது ஒரு வைரத்தைக் கண்டார். ஆசையால் தூண்டப்பட்ட அவர் அதைத் தான் சுலபமாக கையாடலாம், யாரும் சோதனையிடமாட்டார்கள். ஏனென்றால் மூன்று வைரங்களுமே திருடர்களால் திருடப்பட்டிருக்கும் என்று தான் அனைவரும் நினைப்பார்கள் என்று எண்ணினார்.

பிறகு அவர் மூன்று வைரங்களுமே திருடு போய்விட்டதாக ராஜாவிடம் அறிவித்தார். ராஜா, தன் வீர்ர்களை அழைத்து, முதல் நாள் இரவு தான் விலாசம் வாங்கி வைத்திருந்த திருடன் வீட்டுக்கு அனுப்பி அவனை அழைத்துவரச் சொன்னார். திருடன் கொண்டு வரப்பட்டு அரசர் முன் நிறுத்தப்பட்டான். ஆனால் அவரது முழு அரச உடையில் அவனால் அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. ராஜா அவன் முதல் நாள் இரவு அரண்மனையில் என்னவெல்லாம் செய்தான் என்று கேட்டார்.

திருடன் மாடியில் தான் கண்ட நபரிடம் சாவி வாங்கி அரண்மனை கஜானாவைத் திறந்து வைரங்களைத் திருடியதாக ஒப்புக்கொண்டான்.

மேலும் ஆளுக்கொரு வைரம் பங்கிட்டுக் கொண்டதையும் ஒத்துக்கொண்டான். ராஜாவுக்கு இது தெரியும் என்றாலும், தனக்குத் தெரியும் என்பதை மக்கள் தெரிந்து கொள்வதை விரும்பவில்லை. திருடன் உண்மையை மட்டுமே பேசுவதைக் கேட்டு மகிழ்ச்சி கொண்டார். மந்திரி திருடியது மட்டுமல்லாமல், பொய்யும் கூறுகிறார்.

ராஜா மந்திரியைச் சோதனை செய்ய உத்தரவிட்டார். வைரம் அவரது பாக்கெட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக உண்மை பேசிய திருடனைப் பாராட்டும் விதமாக அப்பதவியில் நியமிக்கப்பட்டார். திருடன் மஹாத்மாவிடம் சென்று ஒரு தீய குணத்தை அதாவது பொய் சொல்லுதலை விட்டொழிக்கச் சபதம் செய்தார். அது எவ்வளவு பெரிய நன்மை செய்தது.

பொய் கூறுதலுடன், இதர கெட்ட குணங்களான, திருடுதல், சூதாடுதல் ஆகிய தீய குணங்களும் போய்விட்டன. அவற்றுக்குத் தான் இப்போது அவசியம் இல்லாது போய்விட்டதே.

ஒரு தீய குணத்தைக் கைவிட்டால் அனைத்து தீய குணங்களும் போய் விடும். ஒரு நல்ல குணத்துடன் அனைத்து நல்ல குணங்களும் தானாகவே வரும். உண்மைத்தன்மை அனைத்து துர்க்குணங்களையும் அழிக்கும்.

செயல்பாடு
  • உன்னிடம் உள்ள ஒரு கெட்ட குணத்தை ஒரு சீட்டிலெழுதி அதை விட்டுவிட சபதம் செய்.