கதை
சோம்பேறி மீனா

முன்னொரு காலத்தில் மீனா என்கிற ஒரு சோம்பேறிச் சிறுமி வாழ்ந்து வந்தாள். அவளுக்கு எந்த வேலையும் செய்யப் பிடிக்காது அவளுடைய தாய் அவளை வீட்டு வேலையில் உதவுமாறு கூப்பிட்டால் காதில் விழாதது போல் நடித்து விடுவாள். அவளுடைய தாய் மிகவும் மனமுடைந்து இறைவனிடம் பிரார்த்தித்தாள், ” கடவுளே ! இந்த சோம்பேறித்தனம் எவ்வளவு கெடுதல் என்று மீனாவுக்கு புரிய வையுங்கள்” என்று பிரார்த்தித்தாள். இதைக் கேட்ட மீனா கடகடவென சிரித்தாள். ” என்னம்மா இதைப்போய் பிரார்த்திக்கிறாயே. நம் எவருக்குமே வேலையே இல்லை என்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் .உனக்கு என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றே தெரியவில்லை. இப் பொழுது நான் பிரார்த்தனை செய்கிறேன் பார் ” என்று கண்களை மூடிக் கொண்டு, கடவுளே! எனக்கு எந்த சமயத்திலும் எந்த வேலையும் இருக்கக் கூடாது .என் வேலைகள் எல்லாம் நான் செய்யாமலே தானாகவே நடந்து விடவேண்டும்.” என்றாள்

கடவுள் மீனாவின் பிரார்த்தனையைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார். மீனாவிற்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்தார். அன்றிரவு மீனாவின் கனவில் தோன்றி , “மீனா !உன் பிரார்த்தனை நிறைவேறியது. இனிமேல் நீ எந்த வேலையும் செய்யவேண்டாம். உன்னுடைய எல்லா வேலைகளும் தானே நடக்கும் “என்று கூறி மறைந்தார். மீனாவிற்கு ஒரே சந்தோஷம். அடுத்த நாள் காலை மீனா படுக்கையை விட்டு எழுந்திருந்தாள். அவளுக்கு கனவு நினைவுக்கு வந்தது. அது கனவுதானா இல்லை நிஜமா என்று யோசித்தவாறேப் படுக்கையை விட்டு இறங்கினாள் .ஆனால் கனவு நிஜமானது. அவள் படுக்கையை விட்டு எழுந்த உடன் படுக்கை விரிப்பு தானே பறந்து, தூசி தட்டி மீண்டும் மடிந்து படுக்கையில் விழுந்தது. மீனாவிற்கு ஒரே உற்சாகம் “ஆஹா !என் கனவுப் பலிக்கிறது” என்றாள்.அவள் குளியல் அறைக்குள் நுழைந்தவுடன், பேஸ்ட் தானாகத் திறந்து, அவள் வாயில் வந்து விழுந்தது .ஒரு பிரஷ் வந்து அவள் பல்லைத் துலக்கியது .தண்ணீர் ஒரு பைப் வழியாக வந்து அவள் பற்களை சுத்தம் செய்தது .ஆஹா! என்ன அற்புதம் !மீனா எந்த வேலையும் செய்யத் தேவையில்லை . வாயை மட்டும் திறந்து வைத்திருந்தால் போதும். அவளுடைய வீட்டுப்பாடமும் தானே எழுதப்பட்டது. அவளுடைய துணிகளும், ஷூவும் தானே சுத்தமானது. மீனாவிற்கு ஒரே உற்சாகம் குளியலறைக்குள் நுழைந்தாள். வெந்நீர் தானாக பைப்பை திறந்து அவள் மீது கொட்டியது அவளால் சூடு பொறுக்க முடியவில்லை “கொஞ்சம் பொறு. நான் குளிர் நீர் கலந்து விடுகிறேன்” என்று அலறினாள் ஆனால் ஒரு பயனும் இல்லை வெந்நீர் தொடர்ந்து கொட்டிக்கொண்டே இருந்தது அவளால் சூடு பொறுக்க முடியாமல் குளியலறையை விட்டு பாதி குளியலில் ஓடி வந்து விட்டாள் பயத்தாலும் வலியாலும் அவள் திரும்ப குளியலறைக்குள் நுழையவே இல்லை. பாதி குளியலில் துடைத்துக்கொண்டு உடை அணிய வந்துவிட்டாள்.அவள் ஒரு துணி எடுக்க முயற்சி செய்தாள். ஆனால் ஒரு பழைய கிழிந்த ஆடை அவள் மேல் சுற்றிக் கொண்டது .அவள “் நீ வேண்டாம் நீ வேண்டாம்” என்று கத்தினாள். அந்த ஆடையைக் கழற்ற முயற்சி செய்தாள். ஆனால் பாவம் மீனா கழட்ட முடியவில்லை. அழுதாள் .இப்படி ஒரு பழைய துணியுடன் எப்படி அவள் பள்ளிக்குச் செல்வாள். நண்பர்களெல்லாம் சிரிப்பார்களே? செய்வதறியாது தவித்தாள். காலை சிற்றுண்டி உணவு உண்ணுவதற்காக அம்மாவிடம் வந்தாள். அம்மா அவளுடைய ஆடையை பார்த்து “என்ன ஆயிற்று உனக்கு இப்படி ஒரு பழைய ஆடையை அணிந்து இருக்கிறாயே” என்று கேட்டார் மீனாவிற்கு முகமெல்லாம் சிவந்தது .மீனாவிற்கு தன்னுடைய சோம்பேறித்தனமான பிரார்த்தனை இப்படி ஒரு வலியும் வேதனையும் தருகிறது என்று அழுகையாக வந்தது அவள் சாப்பிட உட்கார்ந்தாள் .சாதம், பருப்பு சாம்பார் அனைத்தும் ஒன்றாக கலந்து உருண்டையாக தானாகவே பறந்து வந்து இவள் வாயில் விழுந்தது. மீனாவிற்கு ஒவ்வொரு முறையும் தனியாக ருசித்து சாப்பிடு தான் பிடிக்கும் ஆனால் இன்று ஒன்றும் நடக்கவில்லை. அவளுக்கு மென்று உண்ண கூட நேரம் தராமல் அடுத்தடுத்து உருண்டைகள் வந்து விழுந்த வண்ணமே இருந்தன.அவளால் நிறுத்தவே முடியவில்லை உருண்டைகள் மூக்கிலும் கன்னத்திலும் முகமெல்லாம் வந்து ஒட்டிக் கொண்டது. உணவு தொண்டையில் மாட்டிக் கொண்டது. தண்ணீர் குடிக்க கையை நீட்டினால் தண்ணீர் தானாக வந்து வாயில் விழுந்து முகம் எல்லாம் கழுவியது. மீனாவின் தாய் “உனக்கு என்ன ஆயிற்று நீ நான் என்று அழகாக சாப்பிடத் தெரியாது “என்று அவளை திட்டினாள். மீனா செய்வதறியாது அழுது கொண்டே எழுந்து சென்று விட்டாள்.மீனா தலைவார ஆரம்பித்தாள் எப்பொழுதும் அவள் அழகாக மெதுவாக சீவி இரண்டு பின்னல் போட்டு ரிப்பன் வைத்து கட்டிக் கொள்வாள். அவளுடைய நண்பர்களுக்குக் கூட இவளுடைய பின்னலைப் பார்த்து மிகவும் பொறாமையாக இருக்கும். ஆனால் இன்று கதையே வேறு. சீப்பு தானாக பறந்து வந்து வேகவேகமாக சிவி வயதானவர்களைப் போல் பன் கொண்டை போட்டது. மீனா கதறினாள் “இல்லை இல்லை நான் இப்படி கொண்டை போட்டுக் கொள்ள மாட்டேன்” என்று அழுதாள் .அந்த கொண்டையை அகற்ற முயன்றாள். ஆனால் பயனில்லை. வேறுவழியின்றி அதே கோலத்தில் பள்ளிக்கு கிளம்பினாள் அழுது கொண்டே சென்றாள். அவளுடைய தோழிகள் பார்த்து “என்ன ஆச்சு உனக்கு இன்று ?ஏன் இப்படி உடை அணிந்து வந்து இருக்கிறாய்?” என்று கேட்டனர். மீனாவால் எந்த பதிலும் கூற முடியவில்லை அமைதியாக இருந்தாள். வகுப்பு ஆரம்பித்ததும் நிலைமை இன்னும் மோசமாகியது கணக்குப் பாடம் எழுத வேண்டிய நேரத்தில் பேனா தானாக எதையோ கிறுக்க ஆரம்பித்துவிட்டது கணக்கு ஆசிரியைக்கு கோபம் வந்தது ஏனெனில் கணக்கு போடுவதற்கு பதிலாக பேனா பாடல்கள் எழுதியது. “பெஞ்ச் மேல் ஏறி நில்” என்று ஆசிரி பள்ளி இடைவேளை நேரம் வந்தது மீனாவிற்கு இக்கட்டன சூழ்நிலை. தண்ணீர் குழாய் அருகில் கையை நீட்டினால் குழாய் தானே திறந்தது. இவள் உடல் முழுவதும் நனைந்து விட்டது. பாவம் மீனா. ஈர ஆடையுடன் மைதானத்தில் ஊஞ்சலில் ஆடச் சென்றாள். அவள் உட்கார்ந்த உடனேயே ஊஞ்சல் வேகமாக ஓடத் துவங்கியது. உயர உயர சென்றது மீனா கத்தினாள் உயிரை செல்லாதே நிறுத்து நிறுத்து என்று. ஆனால் அது உயர உயரச் சென்றது. அந்த வேகத்தில் மீனாவிற்குத் தலைச் சுற்றியது. கீழே விழுந்தாள். சோம்பேறித்தனம் நல்லதல்ல என்று அவள் அம்மா கூறியதன் காரணம் இன்றுதான் புரிந்தது. அவளுடைய வேலைகளை அவளே செய்யவில்லை என்றால், எல்லாம் தானாக நடந்தால் அவளால் விளையாட விளையாட முடியவில்லை. சாப்பிட முடியவில்லை படிக்க முடியவில்லை எதையும் செய்ய முடியவில்லை. அவள் தவற்றை உணர்ந்து கண்களை மூடி இறைவனிடம் பிரார்த்தனை செய்தாள். ” நான் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இனிமேல் நான் சோம்பேறியாக இருக்கவே மாட்டேன்” என்றாள். அவன் தவறை உணர்ந்தாள் என்பதை இறைவன் புரிந்து கொண்டார். அவர் கொடுத்த வரத்தைத் திரும்பப் பெற்றார். அதனால் வேலைகள் தானாக நடப்பது நின்றது. அன்று முதல் மீனா அனைத்து வேலைகளையும் தானே செய்யத் துவங்கினாள்.